Wednesday, May 20, 2015

10¾ லட்சம் மாணவ–மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு நாளை வெளியீடு


சென்னை,



10¾ லட்சம் மாணவ–மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு நாளை(வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது.

நாளை வெளியீடு

பள்ளிக்கூட மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு விளங்குகிறது. அத்தகைய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் 19–ந்தேதி முதல் ஏப்ரல் 10–ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் புள்ளிவிவர மையத்தில் பதிவு செய்யப்பட்டு ஒரு முறைக்கு பல முறை மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஏற்கனவே அறிவித்தார். அதன்படி நாளை காலை 10 மணிக்கு டி.பி.ஐ.வளாகத்தில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிடுகிறார்.

மாணவ–மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in

கலெக்டர் அலுவலகங்கள்

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளிக்கூட மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கூடங்களிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

29–ந்தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

ஜூன் 4–ந்தேதி முதல் பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேவைப்பட்டால் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவும் கடந்த ஆண்டை விட 2 நாட்களுக்கு முன்னதாக வெளியாகின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024