Wednesday, May 20, 2015

ஆபத்தில் முடிந்த அழகுக்கான சிகிச்சை: ஓர் உஷார் ரிப்போர்ட்!


டல் எடையை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட சிகிச்சை விபரீதமாகி ஒரு பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் அழகுக்கலை நிபுணர்களை தேடிச் செல்லும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை, வள்ளுவர்கோட்டம் கக்கன் காலனியை சேர்ந்தவர் கவுரிசங்கர். இவரது மனைவி 35 வயதான அமுதா. இவர்களுக்கு விக்னேஷ், விஜய் என்ற 2 மகன்கள் உள்ளனர். அமுதா சற்று குண்டாக இருந்ததால், தனது உடல் எடையை குறைக்கவேண்டும் என்று விரும்பி, தியாகராயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகி உடல் எடையை குறைப்பது தொடர்பான ஆலோசனையை கேட்டுள்ளார்.

''எளிய அறுவை சிகிச்சை மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்தை பெறலாம்" என்று மருத்துவர்கள் ஆலோசனை தர, 'தான் அழகாகப் போகிறோம்' என்று கனவு கண்டுகொண்டு திருப்தி அடைந்த அமுதா அறுவை சிகிச்சைக்கு சம்மதித்துள்ளார்.
இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமுதாவுக்கு திடீரென்று வயிற்றில் அதிக வலி ஏற்பட, மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

பரிசோதித்த மருத்துவர்கள், 'ஏற்கனவே நடந்த அறுவை சிகிச்சையால் வயிற்றின் உட்பகுதியில் சில இடங்களில் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், மீண்டும்  ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூற, அமுதாவுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை நடந்ததாகவும், அதன் பின்னரும் அவருக்கு வயிற்று வலி குறையாமல், தொடர்ந்து அவதிப்பட்டு வர, மீண்டும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்ததாகவும், மீண்டும் அவருக்கு அங்கே அறுவை சிகிச்சை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

சிகிச்சைக்கு பின்னர் சில நாட்கள் கழித்து வீடு திரும்பிய அமுதாவுக்கு மீண்டும் வயிற்றுவலி அதிகமாக , அவரது கணவர் மற்றும் உறவினர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு அமுதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு அவரது உடலில் நுரையீரல் மற்றும் குடல் பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அமுதா வீடு திரும்பினார்.

தொடர் அறுவை சிகிச்சையால் உடல் பாதிக்கப்பட்ட அமுதா எதிர்பாராதவிதமாக ஒருநாள் கோமா நிலைக்கு தள்ளப்பட்டு படுக்கையில் விழுந்தார். அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து, இப்படி படுத்த நிலையில் அவர் சிகிச்சை பெறுவதை எண்ணி அமுதாவின் உறவினர்கள் வேதனை அடைந்தனர். இதனிடையே நாளுக்கு நாள் அவர் தேகம் மெலிந்து, உருக்குலைந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அமுதாவின் இந்த நிலைமைக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என்று கூறி அவரது கணவர் கவுரிசங்கர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கு, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், தவறான சிகிச்சை அவரது இந்த நிலைக்கு காரணமல்ல என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி அமுதாவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து, அவர் பிரபல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அமுதா பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து, அமுதாவின் உடல் நேற்று பிற்பகலில் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கே, பிணவறை முன்பு அமுதாவின் கணவர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் (தென்சென்னை) ஆதரவு அளித்தனர். 

இதுகுறித்து பேசிய அமுதாவின் கணவர் கவுரிசங்கர், ''எனது மனைவியின் சாவுக்கு மருத்துவமனையின் தவறான சிகிச்சையே காரணமாகும். அதற்கான சாட்சியங்கள் என்னிடம் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கைது செய்யப்பட வேண்டும். எங்களுக்கு நியாயம் வேண்டும்" என்றார் கண்ணீரோடு.

 - சா.வடிவரசு

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024