Friday, February 17, 2017

'இனிஷியல்' ஏற்படுத்திய குழப்பத்தால் 'சஸ்பெண்ட்' வி.ஏ.ஓ.,வுக்கு மறுவாழ்வு

மதுரை: 'இனிஷியல் குழப்பத்தால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, வி.ஏ.ஓ.,வுக்கு பணப் பலன்கள் வழங்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


தஞ்சாவூர், திருவிசைநல்லுார் சி.ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு: வி.ஏ.ஓ., பணியில், 1984ல் சேர்ந்தேன். பண்டார வடையில் ஜி.ராஜேந்திரன், திருவிசைநல்லுாரில் நானும் வி.ஏ.ஓ.,க்களாக பணி புரிந்தோம். ஒருவரின் சொத்து தொடர்பான, பட்டா ஆவணத்தை திருத்தம் செய்த தாக, ஜி.ராஜேந்திரன் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், 2014ல் மோசடி வழக்கு பதிவு செய்தனர். நான், 2016 ஆக., 31ல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், ஜி.ராஜேந்திரனுக்கு பதிலாக, தவறுதலாக என்னை, 'சஸ்பெண்ட்' செய்து, கும்பகோணம் உதவி ஆட்சியர் உத்தரவிட்டார்.




அந்த உத்தரவை ரத்து செய்து, ஓய்வு பெற அனுமதித்து, பணப் பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுதாக்கல் செய்திருந்தார். நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். கும்பகோணம் உதவி ஆட்சியர் ஆஜராகி, ''மனுதாரர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு, 2016 அக்., 22ல் திரும்பப் பெறப்பட்டு, ஓய்வு பெற அனுமதித்து உள்ளோம்,'' என்றார். நீதிபதி: மனுதாரர், 32 ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். சிறந்த பணிக்கான விருதுகளை, மூன்று முறை பெற்று உள்ளார். பெயரின் துவக்கத்திலுள்ள, 'இனிஷியல்' ('ஜி'க்கு பதிலாக 'சி') குழப்பத்தால் சஸ்பெண்ட் உத்தரவு, மனுதாரரை மட்டுமின்றி அவரை சார்ந்தவர்களையும் பாதித்துள்ளது.




'இனிஷியல்' பிரச்னை யால் மனுதாரர் ஓய்வு பெறுவது தடைபட்டுள்ளது. மனுதாரருக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற்று, ஓய்வு பெற அனுமதித்துள்ளதாக உதவி ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால், இவ்வழக்கில் மேலும் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை.மனுதாரருக்கு இதுவரை, ஓய்வு பலன்கள் அனுமதிக்காமல் இருந்தால், அதை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என, இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025