Thursday, February 16, 2017

சூடுபிடிக்கிறது ராமமோகன ராவ் விவகாரம்

தலைமை செயலகத்தில், ராமமோகன ராவ் அறையில் சிக்கிய, இரு மொபைல் போன்களில் பதிவாகியுள்ள விபரங்களை ஆய்வு செய்யும் பணியை, வருமான வரித்துறை முடுக்கி விட்டுள்ளது.மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டியின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையின் போது, தமிழக தலைமை செயலராக இருந்த, ராமமோகன ராவின் மகன் விவேக்குக்கும், ரெட்டிக்கும் வர்த்தக ரீதியிலான தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. ராமமோகன ராவிற்கும், அதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, டிச., 21ல், ராமமோகன ராவ் மற்றும் விவேக் வீடுகளில், வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.

 தமிழக வரலாற்றில் முதல் முறையாக, தலைமை செயலகத்தில் புகுந்து, தலைமை செயலர் அறையில், சோதனை நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. அங்கு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் பற்றி தகவல் கசிந்ததால் தான் அங்கு, வருமான வரித்துறையினர் சென்றனர். அவை, ராவ் ரகசியமாக பேசுவதற்காக பயன்படுத்தியவை. அவற்றை வீட்டுக்கு கொண்டு செல்ல மாட்டார். அவற்றை, வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். அவற்றில், ராவ், யார், யாருடன், எத்தனை முறை பேசினார் என்பது போன்ற தகவல்கள்; வீடியோ, ஆடியோ பதிவுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கலாம் என கருதி, அதை பத்திரமாக வைத்திருந்தனர். அவற்றை ஆய்வு செய்யும் பணி தற்போது துவங்கி உள்ளது. 

தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ராவ் வழக்கை, சிறப்பு வழக்காக நாங்கள் கருதவில்லை. போலீசார் போல் நாங்கள் அதிரடி காட்ட முடியாது. எங்கள் துறையின் நெறிமுறைப்படியே, விசாரணை நடைபெறும். அது, திட்டமிட்ட கோணத்தில் தொடர்ந்து வருகிறது. ராவின் மொபைல் போனில் உள்ள விபரங்கள் சேதம் அடையாமல், சேகரிக்கப்பட வேண்டும். அதனால், வேறு துறையில் இருந்து, தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து, அவற்றை ஆய்வு செய்து வருகிறோம். இதில், முக்கிய விபரங்கள் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

எடப்பாடி மீதும் விசாரணை? : சசிகலா கோஷ்டியால், அ.தி.மு.க.,வின், சட்டசபைக்குழு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது, பல்வேறு புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, வருமான வரித்துறையினர் கூறுகையில், 'எடப்பாடி பழனிச்சாமி மீது, வருமான வரி தொடர்பான வழக்கு உள்ளதா, விசாரணை நடக்கிறதா என்ற தகவல்களை, இப்போது வெளியிட முடியாது. அவரது மகன் மீது, விசாரணை ஏதும் நடக்கவில்லை' என்றனர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறைஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது.

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறை ஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது. சாப்பிடும் முன் மற்றவர்கள...