Sunday, May 10, 2015

அனைவருக்கும் பான் கார்டு வழங்க மத்திய அரசு முடிவு!


புதுடெல்லி: இந்திய மக்கள் அனைவருக்கும் பான் கார்டு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

பாரத பிரதமராக மோடி பதவியேற்ற பின், நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கப்படுவதற்காக ஜன் தன் யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத் திட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தற்போது அனைத்து மக்களுக்கும் பான்கார்டு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இவ்வாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகைக்கான பொருட்களை வாங்குபவர்கள், தங்கள் பான் எண்ணைத் தெரிவிக்கவேண்டியது கட்டாயம் என கூறப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையை உண்டாக்கியது. ஏனென்றால் நாட்டில் உள்ள பெரும்பாலான கிராம மக்களுக்கு பான் கார்டு என்றால் என்னவென்றே தெரியாது என்பது குறிப்பிடத் தக்கது.

எனவே பொதுமக்களின் அறியாமை மற்றும் கவலையை போக்க ஆன்லைன் மூலம் 48 மண நேரத்திற்குள் பான் கார்டு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே போல் பான் கார்டு வழங்கும் சிறப்பு முகாமை நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் 25 கோடி குடும்பங்கள் உள்ள நிலையில், வெறும் 21 கோடி பேர் மட்டுமே பான் கார்டு வைத்துள்ளனர். இதில் 7.5 லட்சம் பேர் கார்ப்பரேட் நிறுவனத்தினர் ஆவார்கள். எனவே நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பான் கார்டு வைத்திருக்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த கூற்றை மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்காவும் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே எளிதில் மக்களுக்கு பான் கார்டு கிடைக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சின்கா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024