Saturday, November 5, 2016

'கத்தி சண்டை' இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு பேசிய போது...

வாய்ப்பில்லாமல் முடங்கவில்லை: மனம் திறந்த வடிவேலு


எனக்கு வாய்ப்பு இல்லாமல் வீட்டில் உட்காரவில்லை என்று 'கத்தி சண்டை' இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு தெரிவித்தார்.

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, ஜெகபதிபாபு, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கத்தி சண்டை'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை விநியோகம் செய்கிறது. நவம்பர் 18ம் தேதி வெளியீடாக இப்படம் திரைக்கும் வரவிருக்கிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விஷால், வடிவேலும், இயக்குநர் சுராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தமன்னா, சூரி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இவ்விழாவில் வடிவேலு பேசியது, "ரொம்ப இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடித்திருப்பதாக பலரும் சொன்னார்கள். உண்மையில் எனக்கு கேப்பே கிடையாது. எனக்கு கேப்பும் கிடையாது; ஆப்பும் கிடையாது. எப்போதுமே இந்த வடிவேலு டாப்பு தான். அதற்கு காரணம் மக்கள் தான்.

எந்தப் பேப்பர், வாட்ஸ்- அப் எடுத்தாலும் நான் தான் கார்டூம் பொம்மையாக வருகிறேன். அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூட என்னை வைத்து தான் காமெடி பண்ணிப் போடுகிறார்கள். இதற்கு என்னுடைய உழைப்பு தான் காரணம். 24 மணி நேரமும் சினிமாவைப் பற்றி மட்டும் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

'கத்தி சண்டை' என்றவுடன் கத்தி எடுத்துக் கொண்டு சண்டைப் போடும் படம் கிடையாது. இந்தப் படம் ஒரு புத்தி சண்டை. இக்கதையைக் கேட்டவுடன், என்னுடைய கதாபாத்திரம் என்ன எனக் கேட்டேன். டூபாக்கூர் மருத்துவரா எனக் கேட்டேன். டூபாக்கூர் மாதிரியே இருக்கும், ஆனால் டூபாக்கூர் மருத்துவர் கிடையாது என்று சொன்னார் சுராஜ்.

கதை சரியில்லாமல் தான், நிறைய படங்களை வேண்டாம் என்று சொன்னேன். உண்மையில், எனக்கு வாய்ப்பு இல்லாமல் வீட்டில் உட்காரவில்லை. நிறைய கதைகளைக் கேட்டேன், அப்படிக் கேட்ட கதைகளில் பிடித்த கதை இந்த 'கத்தி சண்டை'. படம் பார்க்கும் மக்கள், முழுமையாக சிரித்துக் கொண்டே பார்ப்பது போன்று ரொம்ப அற்புதமாக இயக்கியிருக்கிறார் சுராஜ்.

மக்களிடையே நடக்கும் விஷயங்களை எடுத்து தான், தங்கம் மூலாம் பேசி காமெடியாக மக்களிடையே கொடுத்துவிடுவேன். சில நாட்களுக்கு முன்பு எனது அப்பத்தா இறந்துவிட்டது. நான் ஊருக்கு சென்ற போது "ஏம்ப்பா வடிவேலு... எதுல வந்த" என கேட்டது. "ப்ளைட்ல வந்தேன்" என்றேன். "டிக்கெட் எவ்வளவு வாங்குறாய்ங்க" எனக் கேட்டவுடன் "4000 ரூபாய் வாங்குறாங்க" என்றேன். "எவ்வளவு நேரத்துல வந்த" என்ற போது "அரை மணி நேரத்துல வந்தேன்" என்றேன். உடனே "4000 ரூபாய் வாங்கிவிட்டு, அரை மணி நேரத்துல கொண்டு வந்து விடுறானா. ஏண்டா 180 ரூபாய் வாங்கிட்டு ரயிலில் இரவு முழுவதும் படுக்கப் போட்டு கூட்டிட்டு வர்றான். உன்னை ஏமாத்திட்டாங்கடா.. நாலு பெரிய மனுஷங்களை வைத்துப் பேசி காசு வாங்கப் பாருடா" என்று சொன்னது என் அப்பத்தா. கொஞ்சம் நேரம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் சொன்ன விஷயத்தில் அவ்வளவு காமெடி இருக்கிறது. இப்படித்தான் சில காமெடிகளை எடுத்துக் கொள்கிறேன்.

மக்களிடையே என்ன நடக்கிறதோ, அதை தான் அப்படியே என் காமெடிக்குள் வைத்துக் கொள்வேன். நான் இந்தளவுக்கு வளர்ந்ததிற்கு காரணம் மக்கள் தான். அவர்களுடைய ஆசிர்வாதம் என்றைக்குமே இருப்பதால் மட்டுமே எனக்கு இந்த புகழ். அனைவருமே என்னை LEGEND என்கிறார்கள். அப்படியென்றால் என்னவென்று கூட எனக்கு தெரியாது. என்னுடைய வலு என்ன என்பது எனக்கு தெரியாது. யானைக்கு தன்னுடைய பலம் தெரிந்துவிட்டால், வேறு மாதிரி ஆகிவிடும்.

விஷாலுடன் திரையில் எனது முதல் படம் 'திமிரு'. அது வெற்றி. ஜனாதிபதி தேர்தல் மாதிரி ஒரு தேர்தல் நடந்தது. அதிலும் வெற்றி. அது தான் 'நடிகர் சங்கத்தைக் காணவில்லை'. அவரோடு இணையும் மூன்றாவது படம் 'கத்தி சண்டை'. கண்டிப்பாக இதுவும் வெற்றி தான். அதற்கு காரணம் விஷாலுடைய நல்ல மனது" என்று பேசினார் வடிவேலு.

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods