Monday, September 25, 2017

சேலம் பழைய பஸ் நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் குப்பை சேகரித்த கலெக்டர் ரோகிணி



சேலம் பழைய பஸ் நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் குப்பை சேகரிக்கும் பணியில் கலெக்டர் ரோகிணி ஈடுபட்டார்.

செப்டம்பர் 24, 2017, 05:00 AM
சேலம்,

தமிழகத்தில் தூய்மையே சேவை இயக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்திலும் தூய்மையே சேவை இயக்கம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சேலம் மாநகராட்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து சேலம் பழைய பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் தூய்மையே சேவை இயக்க திட்டத்தின்கீழ் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த துப்புரவு பணியில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், சாரண, சாரணியர், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு துப்புரவு பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களும் இணைந்து குப்பை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், சேலம் மாநகர் நல அலுவலர் டாக்டர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், செந்தில்குமார், கலைவாணி, சுரேஷ், சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பழைய பஸ்நிலைய பகுதியில் நடந்த பணியின்போது, கலெக்டர் ரோகிணி குப்பைகளை சேகரித்து பக்கெட்டில் கொட்டினார். கலெக்டரின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் உடன் வந்த அதிகாரிகள், மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் குப்பைகளை சேகரித்தனர். மேலும் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்திருக்கவும் அங்கிருந்த பயணிகளுக்கு கலெக்டர் ரோகிணி அறிவுரை வழங்கினார். மேலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றும் அலட்சியம் காட்டக்கூடாது என்றும் கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

இதுபோல சுகவனேசுவரர் கோவில் வளாகம், சேலம் டவுன் ரெயில் நிலையம், அரசு அருங்காட்சியக வளாகம் ஆகிய பகுதிகளிலும் தூய்மையே சேவை இயக்க பணிகள் நடந்தது. இந்த பணியின்போது சேகரிக்கப்படும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்துவதற்காக 10 குப்பை லாரிகள், 80 தள்ளுவண்டி, 100 பக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

அத்துடன் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டதுடன் துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.

No comments:

Post a Comment

NEWS TODAY 29.03.2026