Monday, September 25, 2017

'கட்டை வண்டி'யாக பாண்டியன், வைகை : ரயில்கள் வேகம் எடுப்பது எப்போது?

பதிவு செய்த நாள்24செப்
2017
23:50




மதுரை: குஜராத்தில் புல்லட் ரயில், ஆந்திராவில், 'ஹைபர் லுாப்' ரயில் விட ரயில்வே நிர்வாகம், மாநில அரசுகளுடன் இணைந்து முயற்சித்து வருகிறது. ஆனால், தெற்கு ரயில்வேயில் மட்டும், மதுரை - சென்னை இடையே இயங்கும் பாண்டியன், வைகை ரயில்களின் வேகம் கூட அதிகரிக்கப்படாமல், 'கட்டை வண்டி'யாக இயக்கப்படுகின்றன. இவற்றின் பெயரில் மட்டுமே, 'அதிவிரைவு' இருக்கிறது. பயண நேரம் அதிகமாக இருப்பதால், பயணியர் அவதிக்கு உள்ளாகின்றனர்.

குஜராத், ஆமதாபாத்தில் இருந்து மஹாராஷ்டிரா, மும்பைக்கு புல்லட் ரயில் இயக்க, பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், 508 கி.மீட்டரை, 2.07 மணி நேரத்தில் கடக்க முடியும்.

ஆந்திர மாநிலத்தில், விஜயவாடா - அமராவதி நகரங்களை இணைத்து, 'ஹைபர் லுாப்' ரயில் வழித்தடம் அமைக்க, முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமெரிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துஉள்ளார். இதன் மூலம், 35 கி.மீட்டரை, ஆறு நிமிடங்களில் கடந்து விடலாம். ஆனால், தெற்கு ரயில்வேக்கு கணிசமான வருவாய் ஈட்டி தரும், தென் மாவட்ட ரயில்களான பாண்டியன், வைகையின் வேகத்தை அதிகரிக்க கூட நடவடிக்கை இல்லை.

சொன்னது என்னாச்சு? : மீட்டர் கேஜ் பாதைகளை, அகல பாதைகளாக மாற்றும் பணி நடந்த போது, தென் மாவட்ட ரயில்கள் மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், வேலுார், ஜோலார்பேட்டை வழியில், சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்டன.

சில ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக திருப்பி விடப்பட்டன. சென்னை செல்ல அதிக நேரம் எடுத்து கொள்ளப்பட்டதால், பயணியர் சிரமப்பட்டனர்.அப்போது, தெற்கு ரயில்வே பொது மேலாளராக இருந்த கீர்த்திவாசன், 'பயணியர் சிரமத்தை பொறுத்து கொள்ள வேண்டும். அகல பாதை பணிகள் முடிந்ததும், ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். குறைந்த நேரத்தில் சென்னை செல்ல முடியும்' என, ஆசை வார்த்தை காட்டினார்.

'பாண்டியன் ரயில், எட்டு மணி நேரம், வைகை ரயில், ஆறு மணி நேரத்திற்குள் சென்னை செல்லும்' என, அப்போது தெரிவிக்கப்பட்டது. அகல பாதை பணிகள் முடிந்து, 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்று வரை, இந்த இரு ரயில்களின் வேகம் அதிகரித்தபாடில்லை.

9 மணி நேரமாகும் : மதுரையில் காலை, 7:00 மணிக்கு புறப்படும் வைகை ரயில் மதியம், 2:40க்கு சென்னை செல்கிறது. சென்னையில் மதியம், 1:30 மணிக்கு புறப்படும் வைகை ரயில், இரவு, 9:20 மணிக்கு மதுரை செல்கிறது. ஆனால், பல நாட்கள் இந்த ரயில் இரவு, 9:40 மணிக்கு தான், மதுரை வருவதாக பயணியர் குற்றம் சாட்டுகின்றனர்.

வைகை ரயில், 497 கி.மீ., கடக்க சராசரியாக, 7 மணி, 40 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது. வைகை இன்ஜின் குறைந்தபட்சம், மணிக்கு, 64 கி.மீ., அதிகபட்சமாக மணிக்கு, 110 கி.மீ., வேகம் வரை இயங்கும் திறன் கொண்டது.
பாண்டியன் ரயில், மதுரையில் இரவு, 8:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 5:25க்கு சென்னைக்கும், அங்கிருந்து இரவு, 9:20க்கு புறப்பட்டு மறுநாள் காலை, 6:10க்கு மதுரைக்கும் வருகிறது. இந்த ரயில், 8 மணி, 50 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது.

சொல்வதுடன் சரி : சென்னை - மதுரை வரை இரட்டை பாதை பணிகள் முடியும் நிலையில் உள்ளன. தெற்கு ரயில்வே பொது மேலாளராக பதவி ஏற்பவர்கள், 'சென்னை - மதுரை ரயில்களின் பயண நேரம் குறைக்கப்படும்' என, அறிவிப்பதுடன் சரி. செயல்படுத்த நடவடிக்கை எடுக்காததால், இந்த ரயில்கள், 'கட்டை வண்டி' வேகத்திலேயே இயக்கப்படுகின்றன
.
பாண்டியன் ரயிலில், ஒரு மாதத்திற்கு முன், முன்பதிவு செய்தால் மட்டுமே இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கிடைக்கும் நிலை உள்ளது. அந்தளவுக்கு பயணியர் கூட்டம் அதிகம். 'புல்லட் ரயில், ஹைபர் லுாப் ரயில்கள் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் பாண்டியன், வைகை ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுத்து கொள்ளுமோ' என, பயணியர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

சப்பைக்கட்டு : ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:இரட்டை அகல ரயில் பாதை பணிகள் இன்னும் முடியவில்லை. திண்டுக்கல் - திருச்சி இடையே, இன்றும் கல்பட்டிசத்திரம், அய்யலுாரில் ஒரு வழிப்பாதையில் தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்பணிகள் முடிந்தால் மட்டுமே, இரட்டை பாதையும் பயன்பாட்டிற்கு வரும்.அதிவேக ரயில்களை இயக்க, தண்டவாளங்களில் ஜல்லி, சிலீப்பர்கள் சீரமைக்கப்பட வேண்டும். 'மிஷின் பேக்கேஜிங்' மூலம் தண்டவாளத்தை சீரமைக்க வேண்டும். பிறகு தான் ரயில்களின் வேகத்தை மணிக்கு, 160 கி.மீ., வரை அதிகரிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தெற்கு ரயில்வே தலைமை இயக்க மேலாளர் அனந்தராமன் கூறுகையில், ''முக்கிய ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, பரிசீலித்து வருகிறோம். இரட்டை பாதை பணி முடிந்த பின், பாண்டியன், வைகை ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection  Sparsh Upadhyay 28 Mar 20...