Tuesday, September 26, 2017

சமையல், 'காஸ்' சிலிண்டர் மானியம் சரியாக வருவதில்லை: மக்கள் புகார்
பதிவு செய்த நாள்26செப்
2017
03:52




வீட்டு சமையல், 'காஸ்' சிலிண்டர் மானியம், முறையாக வருவதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

மத்திய அரசு, ஆண்டுக்கு, 12 வீட்டு சமையல் காஸ் சிலிண்டருக்கு, மானியம் வழங்குகிறது. தமிழகம் உட்பட, நாடு முழுவதும், 2015 ஜன., முதல், காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி, வாடிக்கையாளர்கள், சந்தை விலையில், சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான மானியத்தை, அவர்களின் வங்கிக் கணக்கில், எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும். இந்நிலையில், தற்போது, பலரின் வங்கிக் கணக்கிற்கு, மானிய தொகை முறையாக வருவதில்லை என, புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, பாதிக்கப்பட்டோர் கூறுகையில், 'துவக்கத்தில், காஸ் மானியம், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, அந்த விபரம், எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கப்பட்டது. மூன்று மாதங்களாக, மானிய தொகையும் வரவில்லை; எஸ்.எம்.எஸ்.,சும் வரவில்லை. வங்கி மற்றும் காஸ் ஏஜன்சியில் கேட்டால், சரியான பதில் தருவதில்லை' என்றனர்.

இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: நேரடி மானிய திட்டம் துவங்கிய போது, வாடிக்கையாளரிடம் இருந்து, 'ஆதார்' அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் போன்றவற்றின் நகல்கள் வாங்கப்பட்டன. காஸ் ஏஜன்சிகள், அந்த விபரங்களை சம்பந்தப்பட்ட வங்கியில் வழங்கி, அதனுடன், ஆதார் எண்ணை இணைத்தன. அந்த வங்கிக் கணக்கு எண்ணிற்கு, 'நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' என்ற நிறுவனம் வாயிலாக, மானிய தொகை செலுத்தப்படுகிறது. ஏற்கனவே, வங்கியில் ஆதார் விபரத்தை இணைத்த பலரும், தற்போது, வேறு வங்கிகளில் கணக்கு துவக்குகின்றனர். அங்கும், ஆதார் தருகின்றனர்.

கடைசியாக, எந்த வங்கியில் கணக்கு துவக்கி, ஆதார் வழங்குகின்றனரோ, அங்கு தான், மானிய தொகை செலுத்தப்படும். இந்த விபரம் தெரியாமல், திட்டம் துவக்கிய போது தந்த வங்கிக் கணக்கில், மானியம் வரவில்லை என, சிலர் கூறுகின்றனர். ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுவோரின் விபரங்களை, வருமான வரித்துறையில் இருந்து வாங்கும் மத்திய அரசு, அவர்களுக்கான மானியத்தை நிறுத்தி விடுகிறது. மானிய விபரம், எஸ்.எம்.எஸ்., வரவில்லை எனில், வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும். மானிய திட்டத்தில் இணைந்த, அனைவரின் வங்கிக் கணக்கிற்கும், முறையாக மானிய தொகை செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 28.06.2026