Tuesday, September 26, 2017

பாண்டியன் உட்பட 9 ரயில்கள் வேகம் அதிகரிப்பால் நேரம் மாற்றம்
பதிவு செய்த நாள்25செப்
2017
22:20

பாண்டியன், வைகை உட்பட, ஒன்பது ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுவதால், நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு, அக்., 15ல் வெளியாகிறது.
தெற்கு ரயில்வேயின், ரயில் கால அட்டவணை, ஆண்டுதோறும், அக்., 1ல் வெளியிடப்படும். 

அப்போது, குறிப்பிட்ட சில ரயில்களின் வேகத்தை அதிகரித்தல்; முக்கிய நிலையங்கள் இடையேயான, ரயில்களை நீட்டித்தல் மற்றும் ரயில்களின் நேரத்தை மாற்றி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். 'இந்தாண்டு, அக்., 1ல், ரயில் கால அட்டவணை வெளியிடப்படாது; அக்., 14 வரை, தற்போதுள்ள அட்டவணைப்படியே, ரயில்கள் இயக்கப்படும். அக்., 15ல், புதிய அட்டவணை வெளியிடப்படும்' என, தெற்கு ரயில்வே, சமீபத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், ரயில்வே போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: விழுப்புரம் - திருச்சி இடையே, இரண்டாவது ரயில் பாதை பணி முடிந்து, இருவழி பாதையில், ரயில் போக்குவரத்து நடப்பதால், மலைக்கோட்டை, பாண்டியன், வைகை, பல்லவன் சூப்பர் பாஸ்ட் உட்பட, ஒன்பது ரயில்களில் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இதனால், இந்த ரயில்களின் பயண நேரம், 10 - 30 நிமிடங்கள் வரை குறையும்.

தாம்பரம் முனையம் : தாம்பரம் முனையத்தில் இருந்து, தற்போது, அசாம் மாநிலம், திப்ரூகர் மற்றும் கவுகாத்திக்கு, வாராந்திர ரயில்கள் சோதனை ரீதியாக இயக்கப்படுகின்றன. 

அத்துடன், எழும்பூரில் இருந்து, மும்பை தாதருக்கு இயக்கப்படும், தாதர் எக்ஸ்பிரஸ்; பீஹார் மாநிலம், கயாவுக்கு இயக்கப்படும், கயா வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் போன்றவையும், தாம்பரம் முனையத்தில் இருந்து இயக்கப்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், விரிவான தகவல்களை, தற்போது தெரிவிக்க இயலாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...