Tuesday, September 26, 2017

ரயில் இயக்க மறுத்து தூங்கிய உதவி டிரைவர்! : பொள்ளாச்சி - திருச்செந்தூர் பயணியர் தவிப்பு

பதிவு செய்த நாள்25செப்
2017
22:36




பொள்ளாச்சி: பொள்ளாச்சி - திருச்செந்துார் ரயிலில், பணிபுரிய மறுத்து, உதவி டிரைவர் துாங்கியதால், ரயில் ஒரு மணி நேரம், 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. நுாற்றுக்கணக்கான பயணியர், பொறுமையிழந்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

பொள்ளாச்சியில் இருந்து தினமும் காலை, 6:20 மணிக்கு, திருச்செந்துாருக்கு பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று காலை, குறிப்பிட்ட நேரத்துக்கு ரயில் புறப்படவில்லை. 

ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமானதால், பயணியர், நிலைய மேலாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உதவி டிரைவர், ஓய்வு நேரம் போதவில்லை எனக்கூறி, பணிக்கு வர மறுத்ததால் ரயில் புறப்பாடு தாமதமானது தெரியவந்தது. குறிப்பிட்ட நேரம் ஓய்வெடுத்த பின், உதவி டிரைவர் பாலமுருகன் பணிக்கு வந்தார். அதன்பின், ஒரு மணி நேரம், 20 நிமிடங்கள் தாமதமாக, காலை, 7:40 மணிக்கு ரயில் புறப்பட்டது. 

திருச்செந்துாரில் இருந்து பொள்ளாச்சி வரும் ரயில், வழக்கமாக இரவு, 9:30 மணிக்கு வந்தடையும். நேற்று முன்தினம், கோவில்பட்டி, நல்லி, குமாரபுரம் பகுதிகளில் தண்டவாள பணி நடந்ததால், இரண்டு மணி நேரம் தாமதமாக, இரவு, 11:45 மணிக்கு தான் பொள்ளாச்சி வந்தது. ரயில் டிரைவர் நாகராஜ் மற்றும் உதவி டிரைவர் பாலமுருகன், அதன்பின் துாங்கச் சென்றனர். இரவு ஓய்வுக்கு செல்ல தாமதமானதால், உதவி டிரைவர் பாலமுருகன், எட்டு மணி நேர ஓய்வுக்கு பிறகே பணிக்கு வர முடியும் என, கூறி விட்டார். இதனால், பொள்ளாச்சியில் இருந்து ரயில் கிளம்ப தாமதமானது.

மாற்று ஏற்பாடு இல்லை! : ரயில்வே ஊழியர்கள் கூறியதாவது: இரவு தாமதமானதால், எட்டு மணி நேர ஓய்வுக்கு பிறகே, பணிக்கு வர முடியும் என, உதவி டிரைவர் பாலமுருகன், அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில், மாற்றுப் பணியாளரை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை.
காலையில் பாலமுருகனுக்கு தேவையான ஓய்வு கொடுக்காமல், பணிக்குச் செல்ல வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. மாற்றுப் பணியாளரை ஏற்பாடு செய்திருந்தால், தாமதம் ஏற்பட்டிருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'நள்ளிரவில் டிரைவர்கள் ஓய்வுக்கு சென்றனர். காலையில், மறுபடியும் திருச்செந்துாருக்கு ரயில் இயக்க வேண்டும். இடைப்பட்ட இரவு நேரத்தில், அந்த வழித்தடத்தில் பயிற்சி பெற்ற மாற்று டிரைவரை, உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.06.2026