Tuesday, January 17, 2017

சென்னை டூ மதுரை... புரட்சித் தலைவரை ஒன்றரை நாள் பயணிக்க வைத்த மக்கள்!

MGR Centenary Celebration special article

1973, எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த நேரம்... அதிமுகவைத் தொடங்கியிருந்தார். ஆனால் மக்கள் செல்வாக்கு அது எப்போதும் போல நிறைந்திருந்தது. காரணம் சரித்திர, புராண மாயையில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவில் சமூகக் கருத்துகளை தன் பாணியில் சொல்லி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தார் எம்ஜிஆர். 

அப்போது மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார். சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்குக் கிளம்பினார் தலைவர்.

 இரவு நேரம் என்றாலும் கூட வழியெங்கும் மக்கள் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் மக்கள் ரயிலையே நிறுத்தி விட்டார்கள். அதுவும் திருச்சியை நெருங்கும் போது ரயில் நகரவே வழியில்லை. எம்ஜிஆர் பற்றித்தான் நமக்கு தெரியுமே... எந்த தொண்டரையும் புறக்கணிக்காமல் அனைவர் வரவேற்பையும் ஏற்றுக்கொள்ள ரயில் மிக மிக மெதுவாக நகர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக பக்கவாட்டிலும் ரயிலுக்கு முன்னாலும் செல்ல ஆரம்பித்து விட்டனர்.

மதுரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரைச் சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும். தாமதமாகிக்கொண்டே இருந்தது. ரயில் இந்த வேகத்தில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது என்பதாலும், தன்னால் ரயிலில் வரும் பயணிகளும் பாதிக்கப்படுகிறார்களே என்பதாலும் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார். கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார்.

 கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்ல ஏற்பாடுகள் நடக்கும்போது, விஷயம் அறிந்து ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய்விட்டார். டிரைவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே எம்.ஜி.ஆர். இருக்கும் ரயில் பெட்டிக்கு வந்தனர். ''கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவதுதான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்," என்று கேட்டுக் கொண்டனர். அதோடு எம்ஜிஆர் உடன் பயணித்தவர்களும் "உங்களோடு பயணிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்... எத்தனை நாட்களானாலும் பரவாயில்லை," என்று சொல்ல, எம்ஜிஆர் உருகிப்போனார். நிலைமையை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ரயிலிலேயே பயணத்தைத் தொடர முடிவு செய்தார். தன் நண்பர்களை இந்திரா காந்தியைச் சந்திக்க அனுப்பி வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன்னார். 

வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது. இதுதான் உண்மையான மக்கள் செல்வாக்கு என்பது...! ஆனால் இன்று அதிமுக கட்சி அலுவலகத்துக்கு வரும் கூட்டமே குறைந்துபோய் ஒரு பொதுசெயலாளர் பதவியேற்புக்கு காசு கொடுத்து கூட்டம் அழைத்து வரப்பட்டதாக செய்தி படிக்கிறோம். அதிமுகவின் எதிர்காலத்தை நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது. -ராஜீவ் 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/mgr-centenary-celebration-special-article-271984.html

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...