Sunday, January 1, 2017

உங்கள் புத்தாண்டு முதலீட்டு தீர்மானத்தில் இதெல்லாம் இருக்கிறதா?

- சேனா சரவணன்

நாம் சேமிப்பதில் கில்லாடியாக இருக்கிறோம். ஆனால், அதனை முதலீடு செய்வதில் கில்லாடியா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், பணத்தை பெறும் 4% மட்டுமே வருமானம் தரும் வங்கி சேமிப்பு கணக்கில் வைத்திருக்கிறோம். அல்லது வருமானம் எதுவும் தராத தங்கத்தில் மட்டுமே பணத்தை போட்டு வைத்திருக்கிறோம்.
இதனை தவிர்த்து நாம் சேமிக்கும் பணத்தை சரியாக முதலீடு செய்தால் புத்தாண்டு நமக்கு அதிக மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.


புத்தாண்டு முதலீட்டு தீர்மானங்களுக்குள் போகும் முன், சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள சிறிய வித்தியாசத்தை பார்த்து விடுமோம். நீங்கள் உண்டியலில் பணத்தை போட்டு வைப்பது சேமிப்பு, ஆண்டு ஆரம்பத்தில் அதில் 1,000 ரூபாய் போட்டு வைத்திருந்தால் அது ஆண்டு கடைசியிலும் 1,000 ரூபாயாகவே இருக்கும். இதற்கு பதில் இந்த பணத்தை 10%  வருமானம் தரும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டிருந்தால் ஆண்டு இறுதியில் 1,000 ரூபாய் என்பது 1,100 ரூபாயாக அதிகரித்து இருக்கும். இது முதலீடு.
இனி புத்தாண்டு தீர்மானங்களை பார்ப்போம்.
1.வரவு - செலவு கணக்கு 

இது வரைக்கும் வரவு - செலவு கணக்கு எழுதவில்லை என்றால், புத்தாண்டில் ஆரம்பியுங்கள். இதற்கு 30 பக்க நோட்டு போதும். ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பக்கம். அதில் அன்றைய செலவுகள் மற்றும் வரவுகள் எதைவும் விடாமல் எழுதி வாருங்கள்,

மாதம் முடிந்ததும் ஒவ்வொரு பிரிவிலும் உதாரணத்துக்கு உணவு, சினிமா, செல் போன் ரீஜார்ஜ் என செலவு எவ்வளவு ஆகி இருக்கிறது என்று பாருங்கள். இதில், பலவற்றுக்கு தேவை இல்லாமல் அதிகம் செலவிட்டிருப்பது தெரியும். இதன் மூலம் அடுத்து வரும் மாதங்களில் தேவை இல்லாத செலவை குறைக்க முடியும்.

2. பட்ஜெட்
கட்டாயம் சம்பளம் வாங்கியதும் பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள்.  பட்ஜெட் போடும் போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும்படி போது பார்த்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் தேவை இல்லாத செலவுகளை குறைக்க வழி பிறக்கும்.

3. கடன் மறு ஆய்வு
 வர வேண்டிய கடன், கொடுக்க வேண்டிய கடன், முடிக்க வேண்டிய கடன் உள்ளிட்ட விஷயங்களை அலசி ஆராயுங்கள்.  எந்தக் கடனுக்கு அதிக வட்டி (பர்சனல் லோன், கிரெடிட் கார்ட் கடன்) செல்கிறது என்று பார்த்து அதனை முதலில் அடைக்க திட்டமிடுங்கள்.

4. முதலீட்டுக்கு முன் இன்ஷூரன்ஸ்..
நாம் சம்பாதிப்பதே நம் குடும்பம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதற்காகதான். அதனால், வருமானம் ஈட்டும் நபராக இருந்தால் உங்களின் ஆண்டு சம்பளத்தை போல் குறைவான பிரீமியம், நிறைவான கவரேஜ் கொண்ட டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுங்கள். இதேபோல், மருத்துவச் செலவுக்கு கைகொடுக்கும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை உங்களின் ஓராண்டு சம்பளத் தொகைக்கு இணையாக எடுங்கள்

5. பணவீக்கத்தை தாண்டிய வருமானம் தரும் முதலீடு
உங்களின் முதலீடு, பணவீக்கத்தை தாண்டிய வருமானம் தரும்படி இருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, பணவீக்க விகிதம் (விலைவாசி உயர்வு) 5 சதவிகிதம் என்றால், உங்கள் முதலீடு இதனை விட அதிகமாக வருமானம் தருவதாக இருக்க வேண்டும். அதாவது, வங்கிச் சேமிப்பில் ஆண்டுக்கு (4%), உண்டியலில் வைத்திருந்தால் நஷ்டம்தான்.

இதற்கு பதிலாக ஆர்.டி, எஃப்டி,மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீட்டை மேற்கொண்டால் பணவீக்கத்தை தாண்டி அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

6.தொடர் முதலீடு..
சிலர் வருட ஆரம்பத்தில் முதலீடு செய்கிற ஆர்வத்தில் இருப்பார்கள். சில மாதங்கள் முதலீடு செய்வார்கள். பிறகு விட்டு விடுவார்கள்.

இதற்கு பதில், சம்பளத்திலே இந்த முதலீட்டு தொகையை பிடிப்பது போல் அல்லது மாதா மாதம் வங்கி கணக்கிலிருந்து செல்வது போல் பார்த்துக் கொண்டால் இந்த பிரச்னை வராது.

7. கெட்ட பழக்க வழக்கங்களுக்கு நோ..!
சிலருக்கு விளையாட்டாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கும். இதற்கு சாதாரணமாக தினம் ரூ.35 ரூபாய். மாதம் சுமார் ரூ. 1,000. ஆண்டுக்கு 12,000. பத்தாண்டுக்கு ரூ. 1,20,000. 30 ஆண்டுகளுக்கு ரூ. 3,60,000.
சிகரெட்டுக்கு செலவாகும் மாதம் ஆயிரம் ரூபாயை 10% வட்டி தரும் ஏதாவது ஒரு திட்டத்தில் போட்டு வந்தால் 30 வருடம் கழித்து உங்களுக்கு கிடைக்கும் தொகை ரூ. 22.60 லடசம். அதாவது, 30 ஆண்டுகளில் சிகரெட் பிடிப்பவர் ரூ. 22.60 லட்சத்தை புகையாக விட்டிருக்கிறார்.

8. பொது வாகனங்களை அதிகம் பயன்படுத்துதல்
சிலருக்கு அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் 3,4 கி.மீ தூரம் இருக்கும். பஸ்சில் போனால் அதிகபட்சம் ரூ.15. ஆனால், இவர்கள் ஆட்டோவுக்கு தாராளமாக ரூ.50 செலவு செய்வார்கள்.

இவர்கள் ஆட்டோவுக்கு பதில் பொது வாகனமாக பேருந்தை பயன்படுத்தினால் தினம் மிச்சமாது ரூ.35. மாத சேமிப்பு கிட்டத்தட்ட ரூ. 1,000 என வைத்துக் கொள்வோம். இது 30 ஆண்டுகளுக்கு செல்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

30 ஆண்டுகளுக்கு 10% வட்டி வரும் முதலீட்டில் போட்டால் ரூ. 22.60 லட்சம் கிடைக்கும். இனி, இடை இடையேயாவது பொது வாகனத்தை பயன்படுத்துவீர்கள்தான்.

9. முதலீட்டில் பிரிவினை நல்லது..!
பொதுவாக தங்கம் விலை உயரும் போது பங்குச் சந்தை நன்றாக செயல்படாது. இதே போல், பங்குச் சந்தை சிறப்பாக செயல்படும் போது தங்கம் விலை இறங்கும்.

இதனை சாதாரணமானவர்களால் கணிப்பது கஷ்டம். எனவே, முதலீட்டை எஃப்டி,மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட்  என பிரித்து மேற்கொண்டால், ஒன்று வருமானம் கொடுக்கவில்லை என்றாலும் மற்றது கொடுக்கும். முதலுக்கு மோசம் இல்லாமல் இருப்பதோடு, நல்ல வருமானமும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

10. பயணங்களுக்கு முன்கூட்டியே திட்டம்..!
பயணங்களுக்கு முன் கூட்டியே திட்டமிடுவது மூலம் ஓட்டல் கட்டணம், விமானக் கட்டணம் போன்றவற்றை கணிசமாக மிச்சப்படுத்த முடியும்.


(இந்தக் கட்டுரை 2016 ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி http://www.vikatan.com/personalfinance/article.php?aid=11752 வெளியானது.)

No comments:

Post a Comment

T.N. govt. to launch health insurance for the elderly

T.N. govt. to launch health insurance for the elderly The Hindu Bureau CHENNAI. 18.08.2026 Tamil Nadu will launch the ‘Chief Minister’s Elde...